வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள காஞ்சரம்குடா பெரியகாளை கோட்டைமடு நெல்லிக்காடு ஆற்றுபகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையங்களை செவ்வாய்க்கிழமை (11/02/2025) பொலிஸார் முற்றுகையிட்டு ஒருவரை கைது செய்ததுடன் 10 பீப்பாக்கள் கொண்ட கோடாவை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.ஜ.சில்வாவின் தலைமையில் பொலிஸார் சம்பவதினமான செவ்வாய்க்கிழமை பெரியகாளைகோட்டைமடு பகுதியிலுள்ள கசிப்பு உற்பத்தி நிலையத்தை முற்றுகையிட்டதுடன் ஒருவரை ஒரு பீப்பா கோடாவுடன் கைது செய்தனர்.
இதனை தொடர்ந்து நெல்லிகாடு கசிப்பு உற்பத்தி நிலையத்தை முற்றுகையிட்டபோது அங்கு உற்பத்தியில் ஈடுபட்டவர்கள் தப்பி ஓடியதுடன் 9 பீப்பாக்கள் கொண்ட கோடாவை மீட்டு அங்கு அழிக்கப்பட்டு வெறும் பீப்பாக்களை பொலிஸ் நிலையத்துக்கு கொண்டுவந்தனர்.
இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
[மட்டக்களப்பு நிருபர் – கனகராசா சரவணன்]








