க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்துக்கமைய, மேற்கொள்ளப்படும் பேருந்து சோதனை நடவடிக்கை காரணமாக தங்களது தொழில்துறை தொடர்ந்தும் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாகக் கூறும் பேருந்து உரிமையாளர்கள் சங்கங்களின் பிரதிநிதிகள் காவல்துறைமா அதிபரை சந்தித்து தீர்வு காண தீர்மானித்துள்ளனர்.

க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்துடன் இணைந்து இலங்கை காவல்துறையினரால் நடைமுறைப்படுத்தப்படும் விசேட வாகனச் சோதனை நடவடிக்கை நேற்றுமுன்தினம் முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ், சிவில் உடையில் அதிகாரிகள் பணியில் அமர்த்தப்பட்டு, பயணிகள் பேருந்துகளை ஆய்வு செய்வதுடன், போக்குவரத்து விதிமீறல்கள் குறித்து சாரதிகளை எச்சரிக்கும் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

வாகன சாரதிகள் மற்றும் பொதுமக்களைத் தெளிவுபடுத்தும் வகையில் இந்த நடவடிக்கைகள், முன்னோடி திட்டமாக எதிர்வரும் 19 ஆம் திகதி வரை இரண்டு வாரங்களுக்கு செயல்படுத்தப்படுகிறது.

எவ்வாறாயினும், காவல்துறை சோதனைகள் காரணமாக தங்களது பணிகளைத் தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகப் பேருந்து சங்கங்களின் பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

மோட்டார் வாகன கட்டளைச் சட்டத்தின் கீழ் பேருந்துகளுக்குள் சென்று சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக ஏற்பாடுகள் எதுவும் இல்லை என அவர்கள் கூறுகின்றனர்.

வேகத்தடையை நிர்ணயிக்கும் வீதி சமிக்ஞை இல்லாத இடங்களில் வேகமாக வாகனத்தைச் செலுத்துகின்றமைக்காக சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது.

எனவே, பிரதி காவல்துறைமா அதிபருடனான சந்திப்பில் உரிய வகையில் தீர்வு கிடைக்காவிடின் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட வேண்டிய கட்டாயத்துக்கு தாங்கள் தள்ளப்படுவதாகப் பேருந்துகள் உரிமையாளர்கள் சங்கங்களின் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here