குறுகிய அரசியல் நோக்கங்களைத் தள்ளிவைத்து உண்மையைக் கண்டறிவதற்காக அனைவரும் அணிதிரள வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உயிர்த்த ஞாயிறு தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
இயேசு கிறிஸ்து மனித இதயத்தில் உள்ள இருளை அகற்றி, புதிய நம்பிக்கையை வழங்கி, மனித வாழ்க்கையை மாற்றும் திறனை வெளிப்படுத்தியதை உயிர்த்த ஞாயிறு தினத்தின் சிறப்பம்சமாகக் கருதலாம்.
எனினும், 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டில் நடத்தப்பட்ட மனிதாபிமானமற்ற தற்கொலைத் தாக்குதலால் இன்றும் நமது நாட்டின் கத்தோலிக்க மக்கள் பெரும் துயரத்தில் உள்ளனர்.
இந்தத் தாக்குதலுக்குப் பிறகு, அதைப் பயன்படுத்தி அரசியல் அதிகாரத்தைப் பெற்ற சில அரசியல் கட்சிகளின் கீழும், தற்போதைய அரசாங்கத்தின் கீழும், இந்தத் தாக்குதலின் சூத்திரதாரிகளுக்கு உரிய தண்டனை வழங்க முடியாது போயுள்ளது.
தேர்தல் காலத்தில், நீதியை வழங்குவதாக அரசியல் மேடைகளில் சத்தமிட்டாலும், அதிகாரத்தைப் பெற்ற பிறகு எந்த ஆட்சியாளரும் நீதியை வழங்க விரும்பவில்லை என்பது இன்றும் தெளிவான உண்மையாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, குறுகிய அரசியல் நோக்கங்களையும், பிற்போக்குத்தனமான போக்குகளையும் கடந்து, அனைவரும் ஒன்றிணைந்து நாடாக சிறந்த எதிர்காலப் பயணத்திற்காக அணிதிரள வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தமது உயிர்த்த ஞாயிறு தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.








