எரிபொருள் அளவு நிர்ணய முறைமை (QR) எதிர்வரும் மாதங்களில் மேலும் கடுமையாக அமுல்படுத்தப்படும் என எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க இன்று தெரிவித்தார்.
எரிபொருள் நுகர்வைக் கட்டுப்படுத்தவும், நாட்டு பொருளாதாரத்தின் மீதான அழுத்தத்தைக் குறைக்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர், கியூ. ஆர் முறைமை ஏற்கனவே எரிபொருள் பயன்பாட்டை ஓரளவிற்குக் குறைத்திருந்தாலும், நாட்டில் அதிகப்படியான எரிபொருள் பயன்படுத்தப்படுகிறது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உலகளாவிய எரிபொருள் விலை அதிகரிப்பால், இலங்கை கணிசமான அளவு அந்நியச் செலாவணியைச் செலவிட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது என்றும்,எரிபொருளுக்காக மே மாதத்தில் மாத்திரம் 524 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதனடிப்படையில்,டொலர்களின் வெளிப்பாய்ச்சலைக் குறைக்கவும் பரந்த பொருளாதாரத்தைப் பாதுகாக்கவும் எரிபொருள் நுகர்வைக் குறைக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
டிஜிட்டல் தொழில்நுட்ப அமைச்சுடன் இணைந்து இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், கியூஆர் (QR) முறையை கடுமையாக அமுல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக அவர் மேலும் கூறினார்.







