22 பயணிகளை ஏற்றிச் சென்ற சுற்றுலா ஹெலிகாப்டர் ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் எரிமலை அருகே விழுந்து நொருங்கியதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருந்தனர்.
மேலும் இதன்படி, 17 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ளவர்களை தேடும் பணியில் மீட்புப் படையினர் தொடர்ந்தும் ஈடுபட்டு வருவதாகவும் ரஷ்யாவின் அவசரகால அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வித்யாஸ்-ஏரோவால் இயக்கப்பட்ட ஹெலிகாப்டர் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்றதாக ரஷ்ய செய்தி நிறுவனங்களான TASS மற்றும் Interfax ஆகியவை தெரிவித்துள்ளன.
ஞாயிற்றுக்கிழமை காலை ஒரு மலைப்பாங்கான பகுதியில் ஹெலிகாப்டரின் எச்சங்களை மீட்புக்குழுவினர் கண்டறிந்துள்ளதுடன் மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என்று அவசரகால அமைச்சகத்தை மேற்கோள் காட்டி ரஷ்ய அரசு செய்தி நிறுவனமான ஆர்ஐஏ நோவோஸ்டி தகவல் தெரிவித்துள்ளது.








