எல்நினோ நிலைமையின் காரணமாக ஏற்பட்டுள்ள வறண்ட காலநிலையால் இதுவரை 81,865 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 7 மாவட்டங்களைச் சேர்ந்த 25,628 குடும்பங்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் 23 பிரதேச செயலக பிரிவுகள் இந்த எல் நினோ நிலைமையினால் பாதிக்கப்பட்டுள்ளன. அவற்றில் பாதிக்கப்பட்ட 72,153 பேருக்கு தற்போது குடிநீர் விநியோகிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொனராகலை மாவட்டத்தில் 7 பிரதேச செயலக பிரிவுகளில் 10,264 குடும்பங்களைச் சேர்ந்த 33,023 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேநேரம் மட்டக்களப்பு மாவட்டத்தில் 8 பிரதேச செயலக பிரிவுகளில் 28,523 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.
அம்பாறை மாவட்டத்தில் 2 பிரதேச செயலக பிரிவுகளில் 8,783 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 7,882 பேருக்கு குடிநீர் வழங்கப்பட்டுள்ளது.
பதுளை மாவட்டத்தில் 2 பிரதேச செயலக பிரிவுகளில் 7,876 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பொலன்னறுவை( 2,646 பேர்), இரத்தினபுரி (499 பேர்), அம்பாந்தோட்டை (515 பேர்), ஆகிய மாவட்டங்களிலும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அனர்த்த நிலைமையால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்குதல் மற்றும் குடிநீர் விநியோகிக்கும் பணிகள் தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தின் வழிநடத்தலில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.








