பொறுப்பு கூறல் விடயத்தில் தற்போதைய அரசாங்கமும் கடந்த அரசாங்கங்களைப் போலவே செயற்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
வெளிவிவகார அமைச்சு தொடர்பான இன்றைய குழுநிலை விவாதத்தில் கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
புதிய அரசாங்கத்திலும் எந்த மாற்றமும் இல்லை.
சகல அரசாங்கங்களும் அரசை பாதுகாப்பதையே நோக்கமாகக் கொண்டு செயற்படுகின்றன என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அல்ஜஷீராவிற்கு வழங்கிய செவ்வியில் மருத்துவமனைகள் மீதான தாக்குதல்கள் தொடர்பில் முன்வைத்த கருத்துக்களையும் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் சுட்டிக்காட்டியிருந்தார்.
2008ஆம் ஆண்டு காலப்பகுதியில் மருத்துவமனைகள் மீது பல தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும், இதன்போது பலர் கொல்லப்பட்டதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
அவ்வாறான தாக்குதல்கள் தொடர்பில் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்ட அறிக்கை ஒன்றை வெளிப்படுத்திய அவர், இறுதிக் கட்ட போரில் முள்ளிவாய்க்கால் உள்ளிட்ட பகுதிகளில் பல மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இறுதிக் கட்ட போரில் மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமைக்கு தெளிவான ஆதாரங்கள் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான சம்பவங்கள் இருக்கின்ற நிலையில் உள்நாட்டு பொறிமுறை தொடர்பில் மாத்திரமே தற்போதைய அரசாங்கமும் கருத்துரைக்கிறது.
கடந்த காலங்களில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் புறக்கணித்த போதிலும் தற்போதைய அரசாங்கத்துக்கு அவர்கள் ஆதரவை வழங்கியுள்ளனர்.
முழு வடக்கு மக்களின் ஆதரவு கிடைத்த போதிலும் தற்போதைய அரசாங்கமும் கடந்த அரசாங்கங்களைப் போன்றே செயற்படுகின்றது.
எனினும் தமிழ் மக்கள் உள்நாட்டு பொறிமுறையை விரும்பவில்லை.
யுத்தம் நிறைவடைந்து 16 வருடங்களில் எந்த விதமான தீர்வும் வழங்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.







