தேசிய போர் வீரர்கள் நினைவு தின நிகழ்வுக்கான ஒத்திகையின் போது இடம்பெற்ற சம்பவத்தைத் தொடர்ந்து, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச உட்பட சுமார் 35 பேர் கொண்ட குழுவினர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் தலைமையில் நாளை மே 19 அன்று நடைபெறவுள்ள தேசிய போர் வீரர்கள் நினைவு தின நிகழ்வுக்கான ஒத்திகை, பாராளுமன்ற மைதானத்திற்கு அருகிலுள்ள ரணவிரு நினைவிடத்தில் இன்று நடைபெற்றது.
ஒத்திகை மற்றும் பிரதான நிகழ்வு ஆகியவற்றுக்கான ஏற்பாடுகளும் அமைப்புப் பணிகளும் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, விமல் வீரவன்ச தலைமையிலான குழுவினர் அனுமதியின்றி ரணவிரு நினைவிட வளாகத்திற்குள் நுழைய முயன்றதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அந்தக் குழுவினரின் நடவடிக்கைகள் ஒத்திகைப் பணிகளுக்கு இடையூறு விளைவித்ததாகவும், அவ்விடத்தில் இருந்த அதிகாரிகளின் கடமைகளில் இடையூறு ஏற்படுத்தியதாகவும் பொலிஸ் மேலும் தெரிவித்துள்ளது.
அவ்விடத்தில் கடமையாற்றிய அதிகாரிகள் குறித்த குழுவினர் உள்ளே நுழைவதைத் தடுத்ததாகவும், பின்னர் கூடியிருந்தவர்களை அப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்தியதாகவும் பொலிஸ் ஊடக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் வீரவன்ச மற்றும் குழு உறுப்பினர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க எதிர்பார்க்கப்படுவதாக பொலிஸ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.








