கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இயங்கிவந்த இரு CT ஸ்கேன் இயந்திரங்களும், இரு MRI ஸ்கேன் இயந்திரங்களும் செயலிழந்துள்ளதாக தேசிய கதிரியல் தொழில்நுட்பவியலாளர்கள் சங்கத் தலைவர் சானக்க தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.
அத்தோடு இயந்திர செயலிழப்பு காரணமாக வைத்தியசாலைக்கு சிகிச்சைப் பெற வரும் நோயாளர்களும் வைத்தியசாலை சேவை ஊழியர்களும் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்க நேர்ந்துள்ளதாகவும் சானக்க தர்மவிக்ரம மேலும் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள இயந்திர செயலிழப்பு தொடர்பில் நேற்றய தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்,
தற்போது வைத்தியசாலையில் உள்ள எஞ்சியுள்ள இரு MRI ஸ்கேன் இயந்திரங்களை பயன்படுத்தி 24 மணிநேரமும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. குறித்த இயந்திரங்களில் முதல் இயந்திரம் பழுதாகி 5 மாதங்களும் இரண்டாவது இயந்திரம் பழுதாகி மூன்று வாரங்கள் நிறைவடைந்துள்ளது. மேலும் CT ஸ்கேன் இயந்திரங்களில் முதலாவது இயந்திரம் பழுதாகி 4 வாரங்கள் நிறைவடைந்துள்ளதுடன் இரண்டாவது இயந்திரம் செயலிழந்து இரு நாட்கள் கடந்துள்ளன.
இதனால் உயிராபத்துக்கள் ஏற்படும் சாத்தியப்பாடுகளும் அதிகரித்துள்ளன. பழுதடைந்துள்ள இயந்திரங்களை காலதாமதமின்றி மீள் சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பில் சுகாதார அமைச்சுக்கு அறிவிக்கப்பட்ட போதிலும் இச்செயற்பாட்டை வினைத்திறனுடன் முன்னெடுப்பதற்கு எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.







