2022 மே 9ஆம் திகதி Galle face இல் நடைபெற்ற “கோட்டா கோ கம” போராட்ட முகாமின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுடன் தொடர்புபட்டதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 31 பேரை அடையாளம் கண்டுள்ளதாக சட்டமா அதிபர் அலுவலகம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
அதன்படி, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் இவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்படவுள்ளதாக சட்டமா அதிபர் சார்பில் மன்றில் முன்னிலையான அரச சட்டத்தரணி சஜித் பண்டார, மன்றுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
போராட்டக்காரர்கள் தாக்குதலைத் தடுக்க பொலிஸாரும் அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்காததன் மூலம் அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், விசாரணையானது நேற்று (04) மூவர் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வில் நடைபெற்றது.
இது குறித்து அரச சட்டத்தரணி மேலும் கூறியதாவது, சம்பவத்தின் போது போதுமான பொலிஸ் அதிகாரிகளும் நீர்த்துப்பாக்கிகளும் இருந்தபோதிலும் அவை பயன்படுத்தப்படவில்லை. இதனால், அந்த நேரத்தில் பொறுப்பில் இருந்த மூத்த பிராந்திய காவல் துறை அதிகாரி தேசபந்து தென்னக்கோனுக்கு எதிராக வழக்கு தொடரப்படும்.
எனினும், அப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படமாட்டாது எனவும் குறிப்பிடப்பட்டது.
மனுதாரர்கள் இதற்கான அடிப்படை உரிமை மனுக்களை வாபஸ் பெற ஒப்புக்கொண்டதையடுத்து, நீதிமன்றம் தீர்ப்பளிப்பை பிறிதொரு தேதிக்கு ஒத்திவைத்தது.








