தமிழ் ஜனாதிபதி வேட்பாளர் நியமனம் தமிழ் மக்களின் அபிலாசைகளை வென்றெடுப்பதற்கான எண்ணத்தை மாற்றி தோல்வி அடைந்த ரணில் விக்ரம சிங்கவை வெல்ல வைக்கும் முயற்சியாக அமைவதாக மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன் குற்றச்சாட்டியுள்ளார்.

நேற்றைய தினம் புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் தமிழ் பொது ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும்  தமிழ் மக்களின் எதிர்பார்த்த கோரிக்கை அவர் ஊடாக பிரதிபலிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உருவாக்கப்பட்டது.

இந்த உருவாக்கத்தின் பின்னணியில் சிவில் அமைப்புகள் புத்திஜீவிகள் பலர் பங்காற்றிய நிலையில் அவர்களுடன் இணைந்து பொதுக் கட்டமைப்பில் கையொப்பமிட்ட தமிழ் அரசியல் கட்சிகள் ஜனாதிபதியிடம் ஓடிச் சென்று பேசிய நிகழ்வு கடந்த வாரம் இடம்பெற்றது.

தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நியமித்த நோக்கத்தை தாண்டி அதன் கட்டமைப்பை சிதைத்து தற்போதைய ஜனாதிபதியும் எதிர் வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருமான ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்ததன் மூலம் விளங்கிக் கொள்ளக் கூடியதாக இருக்கிறது.

ஐக்கிய தேசியக் கட்சியின் வரலாற்றில் தமிழ் மக்களை அழித்த வரலாறுகளே அதிகமாக காணப்படுகின்ற நிலையில் தமிழ் கட்சிகள் ரணிலுடன் பேசுவது தமது மக்களை ஏமாற்றும் ஒரு செயலாகும்.

ரணில் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்கிறேன் எனக்கூறி 83 பில்லியனாக இருந்த நாட்டின் கடனை சுமார் 100பில்லியனாக  மாற்றிய பெருமை ரணில் விக்கிரமசிங்கவை சாரும்.

ஊழலற்ற ஆட்சியை ஏற்படுத்துவதற்கும் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கும் தேசிய மக்கள் சக்தியுடன் நாட்டில் உள்ள மக்கள் ஒன்று சேர ஆரம்பித்துள்ளனர்.

ஆகவே தமிழ் மக்களை ஏமாற்றிய ரணில் விக்கிரமசிங்கவுடன் தமிழ் கட்சிகள் உறவை மேற்கொள்வது பொது வேட்பாளரை பாதுகாக்கவாஅல்லது ரணில் விக்ரமசிங்கவை பாதுகாக்கவா என தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here