பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார்.
சந்தேக நபர்களிடமிருந்து சட்டவிரோத ஆயுதங்களை கைப்பற்றும் நடவடிக்கைகளும் மேலும் தீவிரப்படுத்தப்படும் என பதில் பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்தார்.
கடந்த சில நாட்களில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து சட்டவிரோத ஆயுதங்கள் பல பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதேவேளை, போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்ததாக கூறப்படும் 280 மில்லியன் ரூபா பெறுமதியான பணத் தொகையையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இந்த பணத் தொகை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் குருணாகல் பகுதியில் உள்ள ஒரு வீட்டொன்றிலிருந்து கைப்பற்றப்பட்டதாக பதில் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.
இதன்போது, 18 கிராம் ஐஸ் போதைப்பொருள், ஒரு முச்சக்கரவண்டி மற்றும் ஒரு வேனும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட போதைப்பொருளளும் பணத் தொகையும் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவருக்கு சொந்தமானது என பதில் பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்தார்.








