தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த ஊதிய உயர்வு தொடர்பாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் பெருந்தோட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் இடையிலான சிறப்பு கலந்துரையாடல் நேற்று (13) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

இந்த சந்திப்பு, கடந்த வரவுசெலவுத் திட்டத்தின் கீழ் அரச மற்றும் தனியார் துறைகளில் வழங்கப்பட்ட சம்பள உயர்வுகளுக்கு ஏற்ப, தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த ஊதியத்தை உயர்த்தும் முன்மொழிவு குறித்து நடைபெற்றது.

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, தோட்டத் தொழிலாளர்களுக்கு வாழ்க்கைச் சம்பளத்தை உறுதி செய்வதின் அவசியத்தையும், அவர்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.

அதேநேரம், ஊதிய உயர்வை நடைமுறைப்படுத்தும் வழிமுறைகள் குறித்து ஜனாதிபதி நிறுவன பிரதிநிதிகளுடன் விரிவாக ஆலோசனை நடத்தினார்.

பெருந்தோட்டத் துறையின் தற்போதைய சவால்கள் குறித்து நிறுவன பிரதிநிதிகள் விளக்கமளித்தனர்.

இதற்கு பதிலளித்த ஜனாதிபதி,

துறையை வலுப்படுத்த அரசாங்கம் முழுமையான ஆதரவை வழங்கும் என உறுதியளித்தார்.

பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன, தொழிலாளர் அமைச்சர் மற்றும் நிதி பிரதி அமைச்சர் டாக்டர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ,தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க,தொழிலாளர் அமைச்சின் செயலாளர் எஸ்.எம். பியதிஸ்ஸ, தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தி, தொழிலாளர் ஆணையர் நாயகம் நதீக வட்டலியத்த அத்துடன், இலங்கைத் தோட்டக்காரர்கள் சங்கம், இலங்கை முதலாளிமார் சம்மேளனம், மற்றும் பல பெருந்தோட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

நிகழ்வின் முடிவில், நிறுவன பிரதிநிதிகள் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்ததுடன், துறையின் எதிர்கால மேம்பாடு தொடர்பான தங்கள் பரிந்துரைகளையும் பகிர்ந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here