இலங்கையில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு, இந்தியாவிற்கு தப்பிச் சென்று தலைமறைவாகியிருந்த “சுமித் பிரியன்த” என்பவர், அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட நிலையில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்று புதன்கிழமை (12/02/2025) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இரத்தினபுரி, குருவிட்ட பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய மன்தலகல போம்புகலகே சுமித் பிரியன்த என்ற நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.

“சுமித் பிரியன்த” என்பவர் இந்தியாவின் சென்னை நகரத்திலிருந்து நேற்றைய தினம் இரவு 10.15 மணியளவில் யு.எல் – 124 விமானம் மூலம் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் பல்வேறு கொலை சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்பதுடன் இரத்தினபுரி, குருவிட்ட பிரதேசத்தில் 50 இலட்சம் ரூபா பணத்தை கப்பமாக பெறல், போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபடுதல், மிரிஹான பிரதேசத்தில் கைக்குண்டு வைத்திருத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் ஆவார்.

“சுமித் பிரியன்த” என்பவருக்கு எதிராக அவிசாவளை, இரத்தினபுரி மற்றும் கல்கிஸ்ஸை உள்ளிட்ட நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டு வரும் நிலையில், இவர் நீதிமன்றில் ஆஜராகாமல் இந்தியாவிற்கு தப்பிச் சென்று தலைமறைவாகியிருந்தார்.

இந்நிலையில், “சுமித் பிரியன்த” கடவுச்சீட்டு இன்றி இந்தியாவில் தங்கியிருந்த குற்றச்சாட்டின் பேரில் அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட நிலையில் நேற்றைய தினம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

“சுமித் பிரியன்தவை” நீர்கொழும்பு நீதிமன்றில் இன்று வியாழக்கிழமை (2/13/2025) ஆஜர்படுத்த குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here