சுழிபுரம் மேற்கு திருவடி நிலை சவுக்கடி பகுதியில் குகன்சங்கமும், கலைமகளும் சுழிபுரம் மேற்கு புலம் பெயர் தேசமும் தாயக உறவுகளும் இணைந்த பசுமை புரட்சி திட்ட செயல் குழுவினரின் நெல் அறுவடை திருவிழா 02.02.2025 அன்று எளிமையான முறையில் நடைபெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் பிரதம அதிபதியாக தேசிய மக்கள் சக்தியின் இலங்கை பாராளுமன்ற உறுப்பினரும் கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் , யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான, திருவாளர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் கலந்து சிறப்பித்துள்ளார்.

அவர்களுடன் தேசிய மக்கள் சக்தியின் இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் திரு இளங்குமரன் கருணைநாதன், ஜெயசந்திரமூர்த்தி ரஜீவன் ஆகிய மேலும் பல தோழர்கள் சகஜம் வடமராட்சி கிழக்கு தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் M.செல்வராசா (ஷாம்) அவர்களின் நெறிப்படுத்தலில் திருமதி கவிதா உதயகுமார் பிரதேச செயலகம் வலி மேற்கு சங்கானை, மூளாய் கிராம உத்தியோகத்தர் N.சிவரூபன் மற்றும் பசுமை குழு உறுப்பினர்கள், சுழிபுரம் மேற்கு சமூகமட்ட அமைப்பினர் பொதுமக்களுடன் இணைந்து சுழிபுரம் மேற்கு திருவடி நிலை சவுக்கடி பகுதியில் குகன் சங்க தரிசு நில 60 பரப்பு நெல்வயலாக மாற்றப்பட்ட காணியில் பசுமைக் குழு தலைமையில் நெல் அறுவடை மேற்கொள்ளப்பட்டது.

குறித்த குகன் சங்கத்திற்கு சொந்தமான மூதாதையர்களால் கொள்வனவு செய்யப்பட்ட 830 பரப்பு தரிசு நில காணியில் 100 பரப்பு காணிகள் விவசாய நிலமாக பசுமை குழுவினரால் 2023ம் ஆண்டு மாற்றப்பட்ட நிலையில் தற்போது 200 பரப்பிற்கு மேற்பட்ட காணிகளை தாயக உறவுகள் மற்றும் புலம் பெயர் தேசத்தின் பசுமை திட்டத்தின் கீழ் பயன் தரும் பசுமை நிலமாக மாற்றி நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் தற் சார்பு பொருளாதாரத்தை வளர்க்கும் முகமாக குறித்த நிலப்பரப்பு விவசாய நிலமாக மாற்றம் அடையும் போது நன்னீர் மீன்வளத்துறை, கால்நடை வளர்ப்பு, தென்னங்கன்றுகள் பயிர் இடுதல் போன்ற அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமைச்சர் அவர்கள் சாமானிய மக்களும் மகிழ்வாக வாழ்வதற்கான  ஏற்ற தேசத்தை உருவாக்குவதற்கு தமது அரசாங்கத்தினாலான அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்வதாக உறுதி அளித்து  பசுமை குழுவினரிடம் மேலதிக விபரங்களையும் பெற்று சென்றுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here