பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) தாமதமாக வந்த பயணப் பெட்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 2.2 கிலோ கொக்கெய்னை கண்டுபிடித்ததை அடுத்து, 79 வயது ஸ்பானிய நாட்டவர் ஒருவரை இலங்கை சுங்கம் கைது செய்துள்ளது.
விவசாய பொறியலாளரான சந்தேகநபர் ஜூலை 22 அன்று சியரா லியோனிலிருந்து இலங்கை வந்துள்ளார்.
ஆரம்பத்தில் அவரது கைப்பெட்டி பரிசோதிக்கப்பட்டது.எனினும் சந்தேகத்திற்குரிய எதுவும் காணப்படவில்லை. அவரது சோதனைப் பயணப் பெட்டி அதே விமானத்தில் வராத நிலையில், தேவையான நடைமுறைகளின் பின்னர் அவர் விமான நிலையத்தை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதன் பின்னர் பயணப் பெட்டி இலங்கைக்கு வந்த நிலையில் அதனை பெற்றுக்கொள்வதற்காக பயணி ஜூலை 24 அன்று மாலை விமான நிலையத்திற்கு மீண்டும் சென்றுள்ளார்.
பயணப் பெட்டியை விடுவிப்பதற்கு முன்னர், இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகள் அதனை பரிசோதித்த போது சந்தேகத்திற்குரிய பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில், இரண்டு கோப்பு வைக்கும் அட்டைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 4 பொதிகளில் கொக்கெய்ன் கண்டுபிடிக்கப்பட்டன.
கைப்பற்றப்பட்ட கொக்கெய்னின் எடை 2.198 கிலோ என்றும், அது தோராயமாக 109.9 மில்லியன் ரூபாய் பெறுமதி கொண்டது என்றும் சுங்கம் தெரிவித்துள்ளது.
அதேவேளை, சந்தேகநபரும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருளும் மேலதிக விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.








