ஹொரணை நகரில் பிரபலமான தனியார் கல்வி நிலையம் ஒன்றின் உரிமையாளர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் ஹொரணை, நர்த்தன்கல பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
அவரிடமிருந்து 15 கிராம் 250 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், அவற்றை விற்பனை செய்வதற்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கையடக்க தொலைபேசி, சிம் கார்ட் மற்றும் மின்னணு தராசு ஆகியவை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.
மேலும் குறித்த நபர் ஹொரணையின் பிரபல வியாபாரி ஒருவரின் மகன் எனவும் தெரியவந்துள்ளது.
நர்த்தன்கலவில் உள்ள அவரது வீட்டிற்கு அதிகாரிகள் சென்ற சந்தர்ப்பத்தில் அவர் தப்பியோட முயன்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த நபர் மீது ஏற்கனவே போதைப்பொருள் தொடர்பான பல குற்றச்சாட்டுகள் உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது தடுப்பு காவல் உத்தரவு பெறப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
மேலும் இவர் போதைப்பொருள் வியாபாரிகளுடன் தொடர்பு வைத்துள்ளாரா, இவர் மூலம் போதைப்பொருள் விநியோக வலையமைப்பு செயல்படுகிறதா போதைப்பொருளை மாணவர்களுக்கு விநியோகம் செய்கிறாரா என்பது குறித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.








