டுபாயில் வைத்து கைது செய்யப்பட்டு பின்னர் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பசிக், மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வு பிரிவிடம் (CCIB)ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபருடன் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவின் உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்படும் மேலும் 2 நபர்களும் விசாரணை மற்றும் மேலதிக விசாரணைகளுக்காக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
நேற்று (14 இரவு) அபுதாபியில் இருந்து பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு இந்த சந்தேக நபர்கள் கொண்டு வரப்பட்டனர்.
48 வயதான ஷிரான் பசிக், தெஹிவளை, கலுபோவிலவை சேர்ந்தவர் எனவும் இவர் இன்டர்போல் சிவப்பு அறிவிப்பில் தேடப்படும் நபர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவர் 2018 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றிருந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் இடம்பெற்ற ஈரான் – அமெரிக்க மோதலின் போது ஈரான் ஐக்கிய அரபு அமீரகம் மீது நடத்திய தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் இவரது கைபேசியில் இருந்ததாக கூறப்படுவதையடுத்து, மே 26 அன்று டுபாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
பொலிஸாரின் கூற்றுப்படி, சந்தேக நபர் மீது போதைப்பொருள் கடத்தல், ஆயுதங்கள் வைத்திருத்தல், ஆபத்தான மற்றும் கூர்மையான ஆயுதங்கள் வைத்திருத்தல், சட்டவிரோத குழுவில் உறுப்பினராக இருத்தல், தீங்கு அல்லது சேதம் ஏற்படுத்துதல் ஆகிய குற்றச்சாட்டுகள் உள்ளன.
மேலும், போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஏனைய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் மூலம் சட்டவிரோதமாக சம்பாதிக்கப்பட்ட சொத்துக்கள் தொடர்பாகவும் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.








