புத்தாண்டை முன்னிட்டு பிரயாணங்களை மேற்கொள்ளும் பொதுமக்களின் வசதி கருதி எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் விசேட பேருந்து சேவைகள் முன்னெடுக்கப்படும் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

கொழும்பிலுள்ள பிரதான பேருந்து நிலையங்களிலிருந்தும், ஏனைய பகுதிகளிலுள்ள பிரதான நகரங்களிலிருந்தும் இந்த விசேட பேருந்து சேவைகளை முன்னெடுப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதிப் பொது முகாமையாளர் பி.எச்.ஆர்.டி. சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

இந்த பேருந்து சேவைகள் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படும் எனவும் குறித்த காலப்பகுதியில் கொழும்பு பிரதான பேருந்து நிலையத்திலிருந்து மேலதிகமாக 500 பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அதிவேக நெடுஞ்சாலைகளிலும் மாகும்புர மற்றும் கடவத்த ஆகிய பகுதிகளிலிருந்து மேலதிகமாக பேருந்துகளைச் சேவையில் ஈடுபடுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதிப் பொது முகாமையாளர் பி.எச்.ஆர்.டி. சந்திரசிறி தெரிவித்துள்ளார்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here