மது போதையில் பேருந்தை செலுத்திச் சென்றதாக கூறப்படும் இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து சாரதி ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவந்துள்ளதாவது,
சந்தேக நபரான சாரதி மது அருந்திவிட்டு தெல்தெனியவிலிருந்து கண்டி நோக்கி பேருந்தை செலுத்திச் சென்றுள்ள நிலையில் வீதியில் பயணித்த தனியார் பேருந்து ஒன்றின் பக்கவாட்டு கண்ணாடியை மோதிவிட்டு பேருந்தை நிறுத்தாமல் சென்றுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் தனியார் பேருந்தின் சாரதியும் நடத்துனரும் தெல்தெனிய பொலிஸாருக்கு முறைப்பாடளித்துள்ளனர்.
இதனையடுத்து, பொலிஸார் நடத்திய விசாரணையில் சந்தேக நபரான பேருந்து சாரதி மது அருந்தியுள்ளமை தெரியவந்துள்ளது.
பின்னர் பொலிஸார், சந்தேக நபர் செலுத்திச் சென்ற பேருந்தில் இருந்த பயணிகளை கீழே இறக்கிவிட்டு, பேருந்து சாரதியை கைது செய்து பேருந்தை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
கைது செய்யப்பட்ட பேருந்து சாரதி பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதோடு, அறிவிக்கப்படும் திகதியில் நீதிமன்றில் முன்னிலையாகுமாறும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.
சந்தேக நபரான பேருந்து சாரதி இதற்கு முன்னரும் மது அருந்திவிட்டு பேருந்தை செலுத்திச் சென்ற குற்றத்திற்காக பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டு பின்னர் மீண்டும் பணியில் இணைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.








