மன்னார் நீதிமன்றத்தின் முன் கடந்த 16 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட 5 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 29ம் திகதி புதன்கிழமை வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மன்னார் நீதிமன்றத்தின் முன் கடந்த 16 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் வழக்கு விசாரணைக்காக வருகை தந்த இருவர் உயிரிழந்ததுடன்,பெண் ஒருவர் உள்ளடங்களாக மேலும் இருவர் படுகாயம் அடைந்தனர்.
குறித்த விசாரணைகளை முன்னெடுத்து வந்த பொலிஸார் தொடர்ச்சியாக சம்பவத்துடன் நேரடியாக தொடர்பு பட்டவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை (23/1/2025) மேலும் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
மன்னாரைச் சேர்ந்த கடற்தொழிலாளர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.குறித்த கடற் தொழிலாளி குறித்த கொலை சம்பவத்திற்கு உதவி ஒத்தாசை வழங்கிய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்
இதேவேளை குறித்த சம்பவத்தின் பிரதான சந்தேக நபர்கள் அனைவரும் இராணுவத்துடன் தொடர்பு பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
[மன்னார் நிருபர் – எஸ்.ஆர்.லெம்பேட்]








