20,000 ரூபாய் பணத்தை கையூட்டல் பெற்ற காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குருநாகல் – கிரிபாவ காவல்நிலையத்தில் பணியாற்றிய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
தம்மை விட்டுப் பிரிந்து சென்ற மனைவிக்கு எதிராக கணவர் ஒருவரால் முன்வைக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில் விசாரணை நடத்தி, பின்னர் நீதிமன்றத்தின் ஊடாக நட்டஈடு பெற்று தருவதாக தெரிவித்து குறித்த காவல்துறை உத்தியோகத்தர் கையூட்டல் பெற்றுள்ளார்.
அதேநேரம், குறித்த பணத்தை செலுத்த தவறினால் வழக்கு தாக்கல் செய்து விளக்கமறியலில் வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சந்தேக நபரான காவல்துறை உத்தியோகத்தர், முறைப்பாட்டை முன்வைத்த கணவரை அச்சுறுத்தியுள்ளார்.
இந்தநிலையில் முறைப்பாட்டை முன்வைத்த நபரின் வீட்டில் வைத்து சந்தேக நபரான காவல்துறை உத்தியோகத்தர் 20,000 ரூபாய் பணத்தை பெற்றுக் கொண்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.