கண்டி, பிலிமத்தலாவை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவன் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி காயமடைந்துள்ளதாக கடுகண்ணாவை பொலிஸார் தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (28.08) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. 11 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவனொருவரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.
காயமடைந்த மாணவன் பாடசாலை முடித்து விட்டு மீண்டும் வீடு நோக்கிச் சென்று கொண்டிருக்கும் போது பிலிமத்தலாவை ரயில் நிலையத்திற்கு அருகில் வைத்து மூன்று மாணவர்களினால் கத்திக்குத்துக்கு இலக்காகி காயமடைந்துள்ளார்.
பின்னர், காயமடைந்த மாணவன் பிரதேசவாசிகளின் உதவியுடன் பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, இந்த தாக்குதலை மேற்கொண்டதாகக் கூறப்படும் மூன்று மாணவர்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காதல் விவகாரத்தால் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கடுகண்ணாவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.







