பாடசாலைகளுக்கு அருகில் கடைகளை நடத்தி சிறுவர்களுக்கு சிகரெட் விற்பனை செய்த  8 கடை உரிமையாளர்களை ஹிக்கடுவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஹிக்கடுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாடசாலைக்கு அருகிலே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சந்தேகநபர்கள் காலி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அறிவித்து பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ஹிக்கடுவ காவல் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் லலித் சதகிரியின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் 17 வயதுடைய முகவர் ஒருவரை சிகரெட் கொள்வனவு செய்ய பயன்படுத்தப்பட்டே  சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் சந்தேக நபர்களின் கடைகளில் இருந்த சிகரெட் கையிருப்பு பொலிஸாரால் வழக்குப் பொருட்களாகக் கைப்பற்றப்பட்டதாக ஹிக்கடுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இலங்கை சட்டத்தின்படி 21 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சிகரெட் விற்பனை செய்வது சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாடசாலைகளுக்கு அருகில் இயங்கும் தனியார் கல்வி நிலையங்களுக்கு வரும் மாணவர்களை இலக்கு வைத்தே  குறித்த  கடைகளின் உரிமையாளர்கள்  சிகரெட்களை விற்பனை செய்துள்ளனர்.

பாடசாலை மாணவர்கள், முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களை ஒன்றிணைத்து, ஒவ்வொரு பாடசாலையையும் இலக்காகக் கொண்டு உருவாக்கப்பட்ட ‘சுவர் மன்றங்களின்’ ஆதரவுடன் இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

ஹிக்கடுவ பொலிஸ் பிரிவில் உள்ள ஹிக்கடுவ ஸ்ரீ சுமங்கல தேசிய பாடசாலை, தெடந்துவ ஸ்ரீ ரோஹன கல்லூரி, ஹென்னாதோட்டை உயர்தர பாடசாலை, மஹாமாயா பெண்கள் கல்லூரி, போன்ற பல பாடசாலைகளுக்கு ‘சுவர் மன்றங்கள்’ ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ஹிக்கடுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here