மீள் ஏற்றுமதி நோக்கங்களுக்காக மாத்திரம் 200 மில்லியன் தேங்காய்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்படும் என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அந்த அமைச்சு விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, தேங்காய்ப் பால், மா மற்றும் உறைந்த தேங்காய் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் தேங்காய் இறக்குமதி செய்யப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கான அமைச்சரவை அனுமதிப் பத்திரத்தை விரைவில் முன்வைப்பதற்கு எதிர்பார்க்கப்படுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் கைத்தொழில் அமைச்சின் செயலாளர் ஆகியோரால் நியமிக்கப்படுகின்ற குழுவின் ஊடாக, ஒவ்வொரு நிறுவனங்களுக்கும் அவசியமான தேங்காய்களின் எண்ணிக்கை தொடர்பில் ஆராய்ந்து பரிந்துரைகள் முன்வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

 இதற்கமைய அமைச்சரவை அனுமதி கிடைக்கப் பெற்றதன் பின்னர் விரைவில் தேங்காய்களை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here