பாரத பிரதமர் மோடி, இத்தாலியப் பிரதமர் ஜோர்ஜியா மெலோனிக்கு பார்லே மெலடி டொபிகளைப் பரிசளிக்கும் காணொளி கடந்த புதன்கிழமைவெளியாகி வைரலானது. அனைவரும் அந்த டொபியை “பார்லே” உடன் தொடர்புபடுத்தினர்.
இந்த நிலையில் டொபி உற்பத்தியுடன் எந்தவித தொடர்பும் இல்லாத பார்லே இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு புதன்கிழமை 5 விதமாகவும் வியாழக்கிழமை மேலும் 5% ஆகவும் உயர்ந்துள்ளது.
‘பார்லே ப்ரொடக்ட்ஸ்’ நிறுவனத்தால் மெலடி டொபி உற்பத்தி செய்யப்படும் நிலையில் முதலீட்டாளர்கள் தவறாக புரிந்து கொண்டு அதே பெயரை கொண்ட ‘பார்லே இண்டஸ்ட்ரீஸ்’ பங்குகளில் முதலீடு செய்துள்ளனர் என தெரிய வந்துள்ளது.
பார்லே மெலடி டொபி , பங்குச் சந்தையில் பட்டியலிடப்படாத ஒரு தனியார் நிறுவனமான பார்லே ப்ரொடக்ட்ஸால் தயாரிக்கப்படுகிறது.
பார்லே இண்டஸ்ட்ரீஸ், பார்லே ப்ரொடக்ட்ஸ் ஆகியவற்றுக்கு இடையே எந்தவித வணிக தொடர்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தற்செயலான இந்த சம்பவத்தால் புதன்கிழமை ₹5.25 ஆக இருந்த பார்லே இண்டஸ்ட்ரீஸ் பங்கின் விலை, வியாழக்கிழமைக்குள் ₹5.51 ஆக உயர்ந்தது.
இதன் மூலம் அந்த நிறுவனத்துக்கு 2 நாட்களில் 10% லாபம் கிடைத்துள்ளது. மக்கள் இந்த இரண்டு நிறுவனங்களையும் குழப்பிக் கொண்டதால்தான் இவை சம்பவித்துள்ளன.








