வடக்கு ரயில் மார்க்கத்தில் வவுனியா மற்றும் ஓமந்தை இடையிலான பகுதியில் மேற்கொள்ளப்படும் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக, யாழ்தேவி ரயிலின் இயக்கத்தில் தாமதம் ஏற்படும் என இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த மாதம் அக்டோபர் 7 முதல் 18 வரை, கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறை நோக்கி இயக்கப்படும் யாழ்தேவி கடுகதி ரயில் (இலக்கம் 4077) வழக்கமான நேரத்தில் காலையில் 6.40 மணிக்கு கொழும்பில் இருந்து புறப்பட்டு, வவுனியாவை முற்பகல் 11.35 மணிக்கு எட்டும் பின் வவுனியாவில் இந்த ரயில் 2 மணி நேரம் 40 நிமிடங்கள் நிறுத்தப்பட்ட பிறகு, பிற்பகல் 2.15 மணிக்கு மீண்டும் காங்கேசன்துறை நோக்கி பயணத்தை தொடரும்.
அதேபோல், காங்கேசன்துறை ரயில் நிலையத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் ரயில் 30 நிமிடங்கள் தாமதமாக, முற்பகல் 11.00 மணிக்கு பயணத்தை ஆரம்பிக்கும்.
தாமதத்தால் பாதிக்கப்படும் பயணிகள், முன்பதிவு செய்த சீட்டுகளை ரத்து செய்து முழுத் தொகையையும் மீளப் பெறலாம் எனவும், இது முன்பதிவு செய்யும் வசதி உள்ள ரயில் நிலையங்கள் வழியாக மேற்கொள்ளலாம் எனவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.








