யாழ்ப்பாண நகரில் இளைஞர்களை இலக்காகக் கொண்டு போதைப் பொருள் மாத்திரைகளை விற்பனை செய்த கும்பலைச் சேர்ந்த இருவர் இன்று (03) கைது செய்யப்பட்டனர்.
யாழ்ப்பாண மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், கஸ்துரியார் வீதியில் மோட்டார் சைக்கிளில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்தவர்களை சோதனையிட்டபோது, அவர்களிடம் 3,200 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டன.
விசாரணையில், ஐந்து சந்தி பகுதி அருகில் வசிக்கும் 21 வயது மதிக்கத்தக்க இரண்டு இளைஞர்களே குறித்த கும்பலைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்தது.
போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பில் பொலிஸாரின் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், சந்தேக நபர்கள் மாத்திரைகளின் தட்டுப்பாட்டை பயன்படுத்தி, பத்து மாத்திரைகள் கொண்ட ஒரு அட்டையை ரூ.3,000 வரை விற்பனை செய்துள்ளதாக விசாரணையில் வெளிப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் இருவரும் தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகள் முடிந்தபின் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர்.
(யாழ் நிருபர்-லோஜன் விஜய்குமார்)








