2025ஆம் ஆண்டிற்கான முதலாம் காலாண்டிற்குரிய யாழ் மாவட்ட ஊராட்சிமுற்றக் கலந்துரையாடல் கிறிசலிஸ் நிறுவனம் மற்றும் யாழ் மாவட்ட குடிசார் அமைப்புக்களின் சம்மேளனம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் யாழ் மாவட்ட செயலாளர் ம.பிரதீபன் மற்றும் வட மாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் பொ.வாகீசன் ஆகியோரின் இணைத்தலைமையில் இடம்பெற்றிருந்தது.
குறித்த கலந்துரையாடல் நேற்று வியாழக்கிழமை (22.05.2025) யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது கிராம மற்றும் பிரதேச மட்டங்களில் இனங்காணப்பட்டு இதுவரை தீர்க்கப்படாத சுகாதாரப் பிரச்சினை, வீட்டுத்திட்ட நிதி விடுவிப்பு, கட்டாக்காலிகள் பிரச்சினை, குரங்குகளால் ஏற்படும் பொருளாதார நெருக்கடி, கட்டிட அனுமதிகளின் போதான தாமதம், விசேட தேவை உடையோருக்கான வாக்களிப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக முன்மொழியப்பட்டு அவை தொடர்பாக விவாதிக்கப்பட்டு பெரும்பாலான பிரச்சினைகளின் தீர்வுகளுக்குரிய ஆலோசனை மற்றும் வழிமுறைகளும் வழங்கப்பட்டிருந்தது.

நிகழ்வில் விசேடமாக பால்நிலை வன்முறைகள் தொடர்பான வடமாகாண சேவை வழங்குனர்களினுடைய தகவல் திரட்டு வெளியிட்டு வைக்கப்பட்டது.
தகவல் திரட்டினை கிறிசலிஸ் நிறுவன திட்ட மற்றும் பிராந்திய முகாமையாளர் ம.பிரபாகரன், மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் மாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு வழங்கி வெளியிட்டு வைத்திருந்தார்.

மேலும் நிகழ்வில் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த பிரதேச செயலகங்களினுடைய பிரதேச செயலர்கள், சாவகச்சேரி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ்.சுதோகுமார், யாழ்ப்பாண மாவட்ட குடிசார் அமைப்புக்களின் சம்மேளன பிரதிநிதிகள், கிறிசலிஸ் நிறுவன உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
[யாழ் நிருபர் – விஜய்குமார் லோஜன்]








