வாக்குச்சீட்டை முகநூலில் பதிவிட்ட அரசியல் கட்சியொன்றின் உயர்பீட உறுப்பினர் மீது வவுனியா பொலிஸார் விசாரணைகளை நேற்று சனிக்கிழமை (07.09) முன்னெடுத்துள்ளதுடன், அவரது கைத்தொலைபேசியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டு பகுப்பாய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது.

தபால் மூல வாக்களிப்பானது கடந்த 4,5,6ஆம் திகதிகளில் இடம்பெற்ற நிலையில் 5ஆம் திகதி மாலை தனக்கு சொந்தமான முகப்புத்தகத்தில் குறித்த கட்சியின் உயர் பீட உறுப்பினரும், பொது வேட்பாளரை ஆதரிக்கும் பொதுகட்டமைப்பின் வவுனியா மாவட்ட நிதி கையாளுகைக்கு பொறுப்பாளருமான உயர்பீட உறுப்பினர் சங்கு சின்னத்துக்கு புள்ளடியிடப்பட்ட வாக்குச் சீட்டை தனது முகப்புத்தகத்தில் பதிவேற்றியிருந்தார்.

இது தொடர்பில் தேர்தல் ஆணையாளர், வவுனியா மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் மற்றும் தேர்தல் கண்காணிப்பு குழுக்கள் என்பவற்றுக்கு செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய உதவித் தேர்தல் ஆணையாளரால் வவுனியா பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த முறைப்பாட்டுக்கு அமைய, இந்த நபரை அழைத்து விசாரணை நடத்தி வவுனியா பொலிஸார் அவரது கைத்தொலைபேசியை பெற்று அதனை பகுப்பாய்வுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதேவேளை, சங்கு சின்னத்துக்கு புள்ளடியிட்ட வாக்குச்சீட்டை படமெடுத்த ஆசிரியர் ஒருவர் முல்லைத்தீவில் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here