யுத்த காலத்தில் மட்டக்களப்பு விமான நிலையத்தை அண்மித்து கையகப்படுத்தப்பட்ட காணிகளுக்குப் பதிலாக வழங்கப்பட்ட காணிகளுக்கு இதுவரையில் ஆவணங்கள் எதுவும் வழங்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று ஒத்திவைப்பு வேளை பிரேரணை முன்வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் விமானப்படையினரின் வசமுள்ள மக்களின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீநேசன் இதன்போது வலியுறுத்தினார்.
இதேவேளை குறித்த பிரேரணையை வழிமொழிந்து கருத்துரைத்த நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் குறித்த காணிகள் விடுவிக்கப்படுவது கட்டாயமான விடயமாகும் என தெரிவித்தார்.
இதனையடுத்து கருத்துரைத்த வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திரா, குறித்த காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே அரசாங்கமும் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அங்குப் பாதிக்கப்பட்ட மக்களுக்கான காணி ஆவணங்களை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்தார்.








