சட்டவிரோதமான முறையில் நான்கு கோடியே நாற்பது இலட்சம் ரூபா பெறுமதியான 16 தங்க பிஸ்கட்டுகளை கடத்தி வந்த வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் இன்று (13.08) காலை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த வர்த்தகர் இன்று காலை 6 மணியளவில் டுபாயிலிருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-226 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
இந்த தங்க பிஸ்கட்டுகள் 8 வீதம் 2 பொதிகளாக பொதி செய்யப்பட்டு, மறைத்து கொண்டு வந்த பையை விமான நிலையத்திற்கு வெளியே எடுத்துச் செல்ல முயன்ற போது சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட குறித்த வர்த்தகர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.







