2023 ஆம் ஆண்டிற்கான ஒருநாள் சர்வதேச உலகக் கிண்ண இறுதிப் போட்டி நேற்றைய தினம் இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு எதிராக நடைபெற்றிருந்தது.

அஹமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் 6 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி களத்தடுப்பை தீர்மானித்தது.

இதற்கமைய,துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 240 ஓட்டங்களைப் பெற்றது.

இந்திய அணி சார்பாக அதிக பட்சமாக கே.எல். ராகுல் 66 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

அவுஸ்திரேலிய அணி சார்பாக பந்து வீச்சில் மிச்சல் ஸ்டார்க் 55 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுக்களையும் கைப்பற்றினார்.

241 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 43 ஓவர்களில் 4 விக்கட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

அவுஸ்திரேலிய அணி சார்பாக அதிகபட்சமாக டிரேவிஸ் ஹெட் 137 ஓட்டங்களைப் பெற்றார்.

இந்திய அணி சார்பாக ஜஸ்பிரிட் பும்ரா 43 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுக்களையும் கைப்பற்றினார்.

போட்டியின் ஆட்ட நாயகன் விருதை அவுஸ்திரேலிய அணியின் டிரேவிஸ் ஹெட் பெற்றிருந்தார்.

இந்த உலகக் கிண்ணத்தின் தொடர் நாயகனாக இந்திய அணியின் விராட் கோலியும் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here