நாட்டில் எதிர்வரும் ஜூன் மாதம் 10 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் உள்நாட்டிலேயே வாகனப் பதிவு எண்களை அச்சிட எதிர்பார்ப்பதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வாகன பதிவு என் அச்சிடும் பணிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சவுத் ஏசியன் டெக்னொலஜிஸ் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனம், வெரஹெரவில் உள்ள மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள அலுவலகத்தில் ஏற்கனவே இயந்திரங்களை அமைத்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவுத் ஏசியன் டெக்னொலஜிஸ் உடனான 5 ஆண்டு கால ஒப்பந்தம் கடந்த மார்ச் 10 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டதோடு 3 மாதத்தில் அச்சிடும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில்இந்த செயற்பாட்டின் மாதிரிகள் தரம் மற்றும் பாதுகாப்பு தொடர்பாக மொரட்டுவ பல்கலைக்கழகம் சுமார் இரண்டரை மாதங்கள் பரிசோதனை நடத்தியுள்ளது.
இதன்போது அடையாளம் காணப்பட்ட சில விடயங்களை, தொழிற்துறை தொழில்நுட்ப நிறுவனம் மேலும் 2 மாதங்கள் ஆய்வுக்குட்படுத்தியது.
குறித்த அச்சிடும் செயன்முறை நியாயமானதாகவும், வெளிப்படையானதாகவும், பாதுகாப்புத் தரங்களைப் பூர்த்தி செய்வதாகவும் இருப்பதை உறுதி செய்வதற்காகவே இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.








