அரிசியை நாட்டின் பிரதான உணவாக மாத்திரமன்றி, அதன் பயன்பாட்டை விரிவு படுத்துவதற்கான நீண்டகாலத் திட்டம் ஒன்றை அரசாங்கம் தயாரித்து வருவதாக வேளாண்மை அமைச்சர் கே.டி லால்காந்த தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகப் பதிவு ஒன்றில் அவர் இது குறித்துக் குறிப்பிடுகையில், “நெல்லிலிருந்து அரிசி உற்பத்தி செய்யப்படுகிறது. அரிசியை உணவின் முக்கியப் பகுதியாக மட்டுமன்றி, பிற உற்பத்தித் தேவைகளுக்கும் பயன்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
மேலும், தடைகளை நீக்குவதும், சந்தைப் போட்டியின் மூலம் விவசாயிகளைப் பாதுகாப்பதும் இந்தத் திட்டத்தின் அடிப்படை என்றும் அவர் குறிப்பிட்டார்.
“சந்தைப் போட்டியின் மூலம் விவசாயிகளைப் பாதுகாப்பதே அரசாங்கத்தின் நீண்டகாலத் திட்டமாகும் எனவும் இந்த நடவடிக்கைகளைச் செயல்படுத்துவதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகின்றன” என்றும் லால் காந்த மேலும் தெரிவித்தார்.








