தித்வா புயல் காரணமாக ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளத்தால் வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு வழங்கப்படும் மாதாந்த தற்காலிக வீட்டு வாடகை கொடுப்பனவை மேலும் 3 மாதங்களுக்கு நீடிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
திறைசேரி செயலாளர் ஹர்ஷன சூரியப்பெருமவினால் கையெழுத்திடப்பட்டு, அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு அனுப்பப்பட்ட 08/2025 (iv) ஆம் இலக்க வரவு செலவுத் திட்ட சுற்றறிக்கையில் இந்த நீடிப்பு தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய அனர்த்ததால் பாதிக்கப்பட்டவர்களை வலுப்படுத்தும் திட்டத்தின் கீழ், வீடுகளை இழந்து மாற்று இருப்பிடம் இன்றி இருப்பவர்களுக்கு, புதிய வீடு கட்டும் வரை மாதாந்தம் 25,000 ரூபாய் வாடகை கொடுப்பனவு தொடர்ந்து வழங்கப்பட உள்ளது.
இந்த கொடுப்பனவை பெறக்கூடிய அதிகபட்ச காலம் 6 மாதங்களில் இருந்து 9 மாதங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை 2025 டிசம்பர் 5 ஆம் திகதிய வரவு செலவுத் திட்ட சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ஏனைய அனைத்து நிபந்தனைகளும் மாற்றமின்றி தொடரும் என திறைசேரி மேலும் தெரிவித்துள்ளது.
–








