அம்பலாங்கொடை கந்த மாவத்தை பகுதியில் நேற்று இரவு (16.07) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 41 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அவரது வீட்டின் முற்றத்தில் வைத்து துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிதாரி தொடர்பில் எவ்வித தகவல்களும் இதுவரை வௌியாகவில்லை.
உயிரிழந்தவரின் தலையில் சுடப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
குறித்த தம்மிக்க நிரோஷன் என்ற நபர், 2002ஆம் ஆண்டு இலங்கை 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியை பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் வீரர் என தெரிவிக்கப்படுகிறது. பிரபல பாடசாலை ஒன்றின் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியின் தலைவராகவும் இவர் செயற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.








