எதிர்வரும் 2024 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தலைவர் ரிஷப் பந்த், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் Trade ஒப்பந்தத்தில் சேரலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரிஷப் பந்த்தை தக்கவைத்துக்கொள்ளவது குறித்து இதுவரை டெல்லி அணியின் உரிமையாளர்கள் முடிவுசெய்யவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கிடையில், லக்னோ சூப்பர் ஜெயண்ட் அணியின் தலைவர் கே.எல் ராகுல் அணியை விட்டு வெளியேறி, ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் மீண்டும் இணையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022ஆம் ஆண்டு நடந்த பயங்கர சாலை விபத்தில் சிக்கி காயமடைந்த ரிஷப், நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் பங்கேற்றிருந்தார். இந்த தொடரில் 13 போட்டிகளில் 40.55 சராசரியுடன் 446 ஓட்டங்களை குவித்திருந்தார்.
சென்னை அணியின் நட்சத்திர வீரர் தோனி அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடுவது குறித்து தெளிவில்லாமல் இருப்பதால் ரிஷப் பந்த்துக்கு இது சாதகமாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், டெல்லி கேபிடல்ஸ் அணியின் இயக்குனர் சவுரவ் கங்குலி, ரிஷப் பந்த் அணியில் தொடர்ந்தும் விளையாட வேண்டும் என்ற விருப்பத்தில் உள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதேவேளை, லக்னோ அணி 2022ஆம் ஆண்டு அறிமுக்கப்படுத்தப்பட்டதில் இருந்து முக்கிய நபராக இருந்த கே.எல் ராகுல் அடுத்த ஆண்டு வேறு அணிக்கு மாறுவதற்கு உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அடுத்த ஆண்டு அவர் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இணையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.








