ஜப்பானை சக்திவாய்ந்த ஷான்ஷான் சூறாவளி தாக்கியுள்ள நிலையில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடுமையான மழையும் பலத்த காற்றும் கடலில் பேரலைகளும் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தெற்கில் கியூசு தீவில் நேற்று (29.08) காலை புயல் தாக்கியுள்ளது. ஏற்கனவே அங்கு சுமார் 250,000 வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளது. ஜப்பானில் பெரும்பகுதி கடந்த செவ்வாய்க்கிழமை முதல் கடும் மழை பொழிய ஆரம்பித்துள்ளது.
மணித்தியாலத்திற்கு சுமார் 252 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன் 24 மணித்தியாலங்களில் 600 மில்லிமீற்றர் வரை மழை பெய்யலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
எனவே பேரிடரை எதிர்கொள்ள விழிப்புடன் இருக்கும்படி வானிலை ஆய்வகம் எச்சரித்துள்ளது. நிலச்சரிவுகளால் ஏற்படும் மரணங்கள் குறித்த செய்திகளும் வர ஆரம்பித்துள்ளன. ரயில், விமானச் சேவைகளில் இடையூறு ஏற்பட்டுள்ளது.நிலச்சரிவினால் மூவர் உயிரிழந்திருப்பதோடு மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.








