மதுபான “லைசன்ஸ்களுக்காக” ரணிலை ஆதரித்தோர், இரகசியமாக மதுபான “கோட்டாக்களை” பெற்றுக்கொண்டோரின் விபரங்கள், எதிர்வரும் சஜித் பிரேமதாசவின் ஆட்சியில் பகிரங்கப்படுத்தப்படுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் கூட்டணியில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து, செவ்வாய்க்கிழமை (03) மன்னாரில் நடந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,

கோட்டாபய ராஜபக்ஷவின் இனவாத ஆட்சியால், நாட்டின் பொருளாதாரம் வீழ்ந்தது. சிங்களப் பெரும்பான்மை வாக்குகளாலேயே, ஆட்சிக்கு வந்ததாக மமதையுடன் நடந்துகொண்டார் கோட்டா.

மதங்களைப் புண்படுத்துமளவுக்கு அவரது மனநிலை இறுமாப்படைந்தது. கொரோணாவில் மரணித்த முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்களை நல்லடக்கம் செய்யவிடாமல் தீயில் எரித்தார்.

இந்த அராஜகத்துக்கு உடந்தையாக இருந்த அமைச்சர்கள், எம்.பி.க்களே இன்று ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்துள்ளனர்.

நாங்கள் செய்தவற்றை நிறுத்துவதற்கென்றே, இங்குஒரு இராஜாங்க அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளார்.

கட்டுக்கரைக்குளம், வியாயடிக்குளம், நெடுங்கண்டல் குளம் மற்றும் அஹத்திக்குளம் போன்ற விவசாயக் குளங்களைப் புனரமைத்து, இருபோக நெற்செய்கைக்கு வாய்ப்புக்களை வழங்கவுள்ளோம்.

இங்கே வெள்ளமாகத் திரண்டுள்ள மக்கள் பணத்துக்காகவோ, சாப்பாட்டுப் பார்சல்களுக்காவோ சேர்த்த கூட்டமல்ல. சஜித் பிரேமதாசவை வெல்லவைக்கும்  ஒரே வேட்கையோடு சேர்ந்த கூட்டம். சஜித்தின் வெற்றிக்காக அமோக ஆதரவளித்த பெருமையில் முதலிடம் பிடிக்க, மன்னார் மாவட்ட மக்கள் முந்திக்கொள்ள வேண்டும்.

இந்தியாவுக்கு பாலம் அமைத்து வர்த்தகத்தை விரிவுபடுத்தவும் சுற்றுலாத்துறையை மேம்படுத்தவும் சஜித் பிரேமதாசவை வெற்றிபெறச் செய்வோம்” என்றார் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here