இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு பணிகள் (21) நாடளாவிய ரீதியில் நடைபெற்றுவந்த நிலையில் கண்டி மாவட்டத்தில் மக்கள் அச்சமின்றி வாக்களிபக்கும் நிலைமை இருந்ததாகவும் இம் மாட்டிடத்தில் சுமார் 79 சதவீதமான வாக்குகள் பதிவாகியுள்ளதாக கண்டி மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி சந்தன தென்னகோன் தெரிவித்துள்ளார்.
இன்று காலை 7.00 மணி முதல் 4.00 மணிவரை நடைபெற்ற வாக்களிப்பு சமயம் எவ்வித முறைப்பாடுகளோ வன்முறை சம்பவங்களோ இடம்பெறவில்லை என தெரிவித்துள்ள அதிகாரி மிகவும் சுமுகமான முறையில் மக்கள் வாக்களித்துள்ளனர் எனவும் தெரிவித்தார்.
கண்டி மாவட்ட செயலகத்தில் (21 ) மாலை ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கையில் அவர் மேற்கண்ட தகவலை தெரிவித்தார்.
தொடர்ந்துரையாற்றிய தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி,
இம்முறை ஜனாதிபதி தேர்தலில் கண்டி மாவட்டத்தில் வாக்களிக்க 11 இலட்சத்து 91 ஆயிரத்து 399 பேர் (1191399) தகுதி பெற்றுள்ளனர். கண்டி மாவட்டத்தில் 13 ஆசனங்களில் 890 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் மாவட்டத்தில் தேர்தல் கடமைகளுக்காக 15000 அரச உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பொல்கொல்ல கூட்டுறவு பயிற்சி நிறுவனம், பொல்கொல்ல திறந்த பல்கலைக்கழகம், பொல்கொல்ல மகாவலி தேசிய கல்வி பீடம், பொல்கொல்லை மாதிரி பாடசாலை என 124 வாக்கு எண்ணும் நிலையங்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன நேற்று மாலை6.30 மணியளவில் வாக்குகள் எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி, தெரிவித்தார்.
தேர்தல் பாதுகாப்புக்கு 1000 பொலிஸ் உத்தியோகத்தர்களும் 300 விசேட அதிரடிப்படை அதிகாரிகளும் ஈடுபடுத்தப் பட்டுள்ளதாகவும் தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.
கண்டி மாவட்டத்தில் பதிவான தபால் மூல வாக்குகளின் எண்ணிக்கை 55,797 ஆகும்.








