கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையச் செயற்றிட்டத்தை ‘விசேட செயற்றிட்டமாக’ பெயரிட அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
போக்குவரத்து, பெருந்தெருக்கள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவை அமைச்சரால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைய இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கை துறைமுக அதிகார சபையால் கொழும்பு தெற்கு துறைமுக செயற்றிட்டத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தைக் கட்டம் கட்டமாக அபிவிருத்தி செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
துறைமுக அதிகார சபைக்கு முழுமையான உரித்துடன் கூடிய கொள்கலன் முனையமாக அதனை இயக்குவதற்கு ஏற்கனவே அமைச்சரவையால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, குறித்த சிவில் வேலைகளுக்கான ஒப்பந்தம் தற்போது வழங்கப்பட்டுள்ளதுடன், கட்டுமானப் பணிகளும் தற்போது முன்னெடுக்கப்படுகின்றன.







