சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாவது மீளாய்வு தொடர்பில், சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இன்று (23.11.2024) காலை உத்தியோகபூர்வ அறிக்கையொன்றை வௌியிடவுள்ளனர்.
மூன்றாவது மீளாய்வை நிறைவு செய்வதற்காக பொருளாதாரக் கொள்கைகள் குறித்த பணியாளர் அளவில் உடன்பாட்டிற்கு வந்தமை தொடர்பில் இதன்போது அறிவிக்கப்பட உள்ளது.
சர்வதேச நாணய நிதியத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான மூன்றாவது மீளாய்வு தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதில் சர்வதேச நாணய நிதியத்தின் சார்பில் சிரேஷ்ட தூதுக்குழு பிரதானி பீட்டர் ப்ரூவர் உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்ததுடன் இலங்கை அரசாங்கம் சார்பில் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ உள்ளிட்ட குழுவினரும் கலந்துகொண்டனர்.
சர்வதேச நாணய நிதியத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் இடம்பெற்ற மூன்றாவது மீளாய்வு தொடர்பான கலந்துரையாடல் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.








