மட்டக்களப்பில் கடந்த 10 தினங்களுக்கு முன்னர் விளைந்த வேளாண்மையை அறுவடை செய்யவிடாது விவசாய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்ட திகதியில் தான் அறுவடை செய்ய வேண்டும் என சிலர் அமைப்புகள் என்ற பெயரில் மனித உரிமை ஆணைக்குழுவுக்கு சென்று தடுத்தனர். இதனால் இன்று மழை வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான ஏக்கர் வேளாண்மை வெள்ள நீரில் மூழ்கியுள்ளது. இதை தடை போட்டவர்களே இந்த நஷ்டத்தை தர வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சீரற்ற காலநிலை காரணமாக இரு தினங்களாக பெய்துவரும் கனமழையினால் மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் வயல் நிலங்கள் வெள்ள நீரில் மூழ்கி வேளாண்மை பாதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஊடகங்களுக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை (19/1/2025) இவ்வாறு தெரிவித்தனர்.

2024-2025 ஆண்டு பெரும்போக வேளாண்மை செய்கை தொடர்பாக முன்னோடி கூட்டத்தில் எதிர்வரும் 20 ம் திகதி நெல் அறுவடை என தீர்மானிக்கப்பட்டு முடிவு எட்டப்பட்டது. இருந்தபோதும்  கடந்த 10 தினங்களுக்கு முன்னர் அறுவடை செய்யும் நிலையில் வேளாண்மை விளைந்துள்ளதுடன் அறக்கொட்டி பூச்சி தாக்கமும் ஏற்பட்டுள்ளது.

இருந்தபோதும் அனர்த்த முகாமைத்துவத்தால் எதிர்வரும் 18 ம் திகதியில் இருந்து கனமழை பெய்யும், விவசாயிகள் அவதானமாக செயற்படுமாறு அறிவித்தனர். இதனையடுத்து அரசாங்க அதிபரை சந்தித்து கனமழைவர இருக்கின்றது கடந்த 10 நாட்களுக்கு முன்னர் அறுவடை செய்ய வேண்டிய நிலையில் பாரியளவில் விளைந்த வேளாண்மை  மற்றும் அறக்கொட்டி பூச்சி தாக்கம் ஏற்பட்ட வேளாண்மை அறுவடை செய்ய வேண்டியுள்ளது. ஆகவே அறுவடையை செய்ய அந்தந்த அமைப்புக்களை தீர்மானித்து முடிவெடுக்குமாறு கேட்டுக் கொண்டோம்.

அதற்கு அரசாங்க அதிபர் வாய்மூலமாக ஒரு உத்தரவு தந்தார். அமைப்புக்கள் ஓம் என்றால் உடனடியாக அறுவடை செய்யுமாறு மழை வெள்ளத்தில் பாதிக்காது செய்யுமாறு தெரிவித்தார். அந்த வகையில் ஒரு விவசாயி அறுவடை செய்ய ஆரம்பித்ததையடுத்து அதனை  சிலர்  அமைப்புக்கள் என தெரிவித்துக் கொண்டு வேறு பெயர்களை சூட்டிக் கொண்டு பச்சைக்காய்களை வெட்டப் போகின்றார்கள் என பொய்பிரச்சாரத்தை தெரிவித்து மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்து அறுவடை செய்வதை தடுத்தனர்.

இதனால் இன்று கனமழை வெள்ளத்தினால் வயல் நிலங்கள் மூழ்கி தண்ணீரில் மிதக்கின்றது. விவசாய அமைப்பு உருவாக்கப்பட்ட காலத்தில் இருந்து கடந்த 10 வருடம் விவசாய அமைப்பு தலைவராக இருந்து சேவை செய்த நான் கடந்த 3 வருடத்திற்கு முன்னர் எனது வயது காரணமாக அதில் இருந்து விலகிவிட்டேன். தற்போது பார்கின்ற போது வேதனையாக இருக்கின்றது. ஒரு தொழிலை செய்யப் போறவன் அந்த தொழிலில் அனுபவம் பெற்றவனாக இருக்கவேண்டும் ஆனால் எதுவுமே தெரியாதவன் ஒரு ஏக்கர் காணி இல்லாதவன் இங்கு வந்து இந்த விவசாயத்தை  பற்றி கதைக்கின்றார்களே.

பெரும்போக செய்கை என்பது ஒருவருக்கு முந்தும் ஒருவருக்கு பிந்தும் இருந்தபோதும் விளைந்த வேளாண்மை நிக்காது இந்த மழைகாரணமாக ஆயிரக்கணக்கான ஏக்கர் வேளாண்மை தண்ணீரில் மிதக்கின்றது. அத்துடன் அறக்கொட்டி பூச்சி இருந்தும் விளைந்த வேளாண்மையை வெட்டிக் கொள்ள முடியாத நிலையை சிலர் உருவாக்குகின்றனர் என்றால் இவர்கள் என்ன விவசாயிகள்.

மூன்று அழிவு இடம்பெற்றுள்ளது. அதாவது வெள்ளம், பூச்சி, நேரத்துக்கு வெட்டவில்லை இந்த காரணத்தால் இந்த அழிவு ஏற்பட்டுள்ளது. காலநிலை மாற்றத்துக்கு ஏற்றவாறு தீர்மானத்தை மாற்றி தந்திருக்கலாம். விளையாதவர்கள் பிந்தி அறுவடை செய்யமுடியும் ஆனால் அவர்கள் நகரில் இருந்துகொண்டு பச்சைக்காய் என சொல்லிக் கொண்டு எங்களுடைய வாழ்வாதாரத்தை நாசமாக்குகின்ற வேலையை செய்கின்றனர்.

முழு நெல்லும் முளைத்திதுவிட்டது இதனை அறுவடை செய்தும் பிரயோசனம் இல்லை இது சாப்பாட்டுக்கும் எடுக்க முடியாது வியாபரியும் எடுக்க மாட்டான் மனித உரிமையில் முறைப்பாடு செய்தவர்களிடம் இந்த நஷ்டத்தை பெற்றுத்தரவும்.

அரசாங்க அதிபர் விளைந்த வேளாண்மையை வெட்டுமாறு தெரிவித்தார். அவர் தெரிவித்தமாதிரி நாங்கள் வெட்டியிருந்தோம் என்றால் பாதுகாப்பாக நெல்லை எடுத்திருக்கலாம். ஆனால் தற்போது உன்னிச்சைக்குளம் வான்கதவு திறக்கப்பட்டுள்ளது. இதனால் பாரிய அழிவை ஏற்படுத்தவுள்ளது.

விவசாயம் தெரியாத சில வெளிநபர்கள் அமைப்பு என இருப்பவர்கள் தடைபோட்டு எமது வேளாண்மை நாசமாகியுள்ளது. இந்த நஷ்டத்தை அரசாங்கம் எப்படி தரமுடியும். மனித உரிமையில் போய் தடை போட்டவர்கள் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இவர்கள் என்ன பதில் சொல்லபோகின்றனர். இவர்களிடம் நஷ்டத்தை வாங்கி தரவும் என ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.

[மட்டக்களப்பு நிருபர் – கனகராசா சரவணன்]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here