கொழும்பு – கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த சந்தேக நபரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு பொலிஸாருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

“மோதரை நிபுன” என்று அழைக்கப்படும் நபரொருவரினால் இந்த கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

கொட்டாஞ்சேனை, கல்பொத்த பிரதேசத்தில் உள்ள கையடக்கத் தொலைபேசி விற்பனை நிலையம் ஒன்றிற்கு கடந்த பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் சென்ற இரு துப்பாக்கிதாரிகள் விற்பனை நிலையத்தின் உரிமையாளரை சுட்டுக்கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தனர்.

இதனையடுத்து கொட்டாஞ்சேனை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், துப்பாக்கிதாரிகள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பின்னர், பொலிஸ் அதிகாரிகள் சிலர் இணைந்து கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை கைப்பற்றுவதற்காக கைது செய்யப்பட்ட துப்பாக்கிதாரிகளுடன் மட்டக்குளி, காக்கைதீவு பிரதேசத்திற்கு பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி சென்றனர்.

இதன்போது துப்பாக்கிதாரிகள் இருவரும் பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்றதால் பொலிஸ் அதிகாரிகள்,  துப்பாக்கிதாரிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்ததினர்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த துப்பாக்கிதாரிகள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவத்தையடுத்து, “மோதரை நிபுன” என்று அழைக்கப்படும் நபரொருவர் கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு ”கம்பஹாவில் விளையாடிய விளையாட்டை இங்கு செய்ய வேண்டாம்; உங்களுக்கு நல்லதா? கெட்டதா? நடக்க வேண்டும்” என கூறி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இந்த சம்பவத்தை கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி நீதிமன்றில் தெரிவித்ததையடுத்து சந்தேக நபரை கைது செய்ய பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here