அம்பாறை மாவட்டத்தின் மாவடிப்பள்ளி வயல் கண்டங்களில் காட்டுயானைகள் சஞ்சரிப்பதை பிரதேச வாசிகள் அவதானித்துள்ளனர்.
பெரும்போக நெற்பயிர்செய்கை அறுவடை முடியும் தறுவாயிலில் பட்டியாக நூற்றுக்கு மேற்பட்ட யானைகளை காணலாம். அவற்றுள் அதிகமானவை குட்டி யானைகளாக காணப்படுகின்றதையும் அவதானிக்க முடிந்ததாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
இதனை பார்வையிட மக்கள் கூட்டமும் வருகை தருகின்றனர். காட்டுயானைகள் கூட்டமாக இருப்பதனால் மக்களுக்கு பாதிப்பு இல்லை எனவும் , காட்டுயானை கூட்டமானது ஆற்றுபடுக்கைகளில் குட்டிகளுடன் குளிப்பதையும் தாம் அவதானித்தாக பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.
எனினும் இவ்வாறு தொடர்ந்தும் இருப்பது மாவடிப்பள்ளி வயல் கண்டங்களினை சூழ காணப்படும் கல்முனை, சாய்ந்தமருது, சம்மாந்துறை, காரைதீவு போன்ற பிரதேசங்களுக்கு ஆபத்தாக இருக்கும் எனவும், இக்காட்டு யானை கூட்டம் தொடர்ந்து 02 வருடங்களாக வந்தாலும் இம்முறையே பெரிய பட்டியாக வருகை தந்துள்ளதாகவும், இதனை பெருங்காட்டுப்பகுதிக்குள் அனுப்ப உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், பிரதேச வாசிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.
[மட்டக்களப்பு நிருபர் – சதானந்தம் ஸோபிதன்]








