காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோனுக்குச் சொந்தமான சொத்துக்களை அடையாளம் கண்டு பட்டியலிடும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இதற்காக தற்போது பல குழுக்கள் செயல்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோனை கைது செய்வதற்கான கூட்டு நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பதில் காவல்துறைமா அதிபர் பிரியந்த வீரசூரியவின் மேற்பார்வையின் கீழ் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு சொந்தமான ஹோகந்தர பகுதியிலுள்ள வீடு குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று பிற்பகல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

வீட்டில் கண்டெடுக்கப்பட்ட பல சந்தேகத்திற்குரிய பொருட்கள் தொடர்பிலும் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

எவ்வாறாயினும், பிடியாணை பிறப்பிக்கப்பட்டு சுமார் மூன்று வாரங்களை அண்மிக்கின்ற போதிலும், காவல்துறைமா தேசபந்து தென்னகோன் இன்றுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

அவரைக் கண்டுபிடிப்பதற்காக ஆறு குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.

இதற்கிடையில், அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் நேற்றைய செய்தியாளர் சந்திப்பில், தேசபந்து தென்னகோன் தொடர்பாகக் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்குப் பதிலளித்த அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, தேசபந்து தென்னகோனை கைது செய்வதற்குச் சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

எனினும், அரசாங்கம் அவரை பாதுகாப்பதற்கு எந்த வகையிலும் அனுசரணை வழங்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here