மன்னார் நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக கடந்த ஜனவரி மாதம் 16 ஆம் திகதி இருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் வெள்ளிக்கிழமை (25) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மன்னார் பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் மன்னார் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட 2ஆவது மைல்கல் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர், மன்னார் கொட்டவெளி பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவர் ஆவார்.

இவர் மன்னார் நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக இருவரை சுட்டுக்கொலை செய்த பிரதான சந்தேக நபர்களுக்கு தப்பிச் செல்வதற்கு உதவி செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரிடம் இருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் ஒரு கையடக்கத் தொலைபேசி என்பன  கைப்பற்றப்பட்டது.

இதனையடுத்து கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here