நாட்டில் மூன்று தசாப்த காலமாக நிலவிய போர் மௌனிக்கப்பட்டு, இன்றுடன் 16 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
2009 ஆம் ஆண்டு மே மாதம் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தில் உயிரிழந்த தமிழ் மக்களின் நினைவாக, வருடாந்தம் மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்படுகிறது.
வருடாந்தம் மே 12 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் அனுஷ்டிக்கப்படுகிறது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு, வடக்கு கிழக்கில், நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு, முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வுகளும் இடம்பெற்று வருகின்றன.
இந்தநிலையில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்றைய தினமும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
பிரதான நினைவேந்தல் நிகழ்வு முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் நடைபெறவுள்ளது.
முற்பகல் 10.15க்கு கொள்கைப் பிரகடனம் வாசிக்கப்பட்டு, 10.29 அளவில் மணி ஒலி எழுப்பப்பட்டு அகவணக்கம் செலுத்தப்படும்.
இதனையடுத்து பொதுச்சுடர் ஏற்றப்படவுள்ளதுடன், பொதுச் சுடர் ஏற்றப்பட்டதன் பின்னர் நினைவேந்தலில் பங்கேற்பவர்களால் தீபங்கள் ஏற்றி அஞ்சலி செலுத்தப்படும்.
பிரதான நினைவேந்தல் நிகழ்வுக்கு முன்னதாக, காலை 6.30 முதல் முள்ளிவாய்க்கால் கப்பலடி கடற்கரையில், இறுதிப் போரில் உயிரிழந்தவர்களுக்கு ஆத்ம சாந்திக்காகப் பிதிர்க்கடன் கிரியைகள் நடைபெறவுள்ளன.
இதேநேரம், இன்றைய தினத்தில் நாம் அனைவரும் திரளாக ஒன்றுகூடி எமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்கவும் நீதி வேண்டியும் ஒன்றுபட வேண்டும் என முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழுவின் வடக்கு, கிழக்கு பொதுக் கட்டமைப்பின் இணைத் தலைவர் அருட்பணி சின்னத்துரை லியோ ஆமஸ்ட்ரோங் அழைப்பு விடுத்துள்ளார்.
இதேவேளை, மட்டக்களப்பு – கல்லடி பாலத்துக்கு அருகில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு முள்ளிவாய்கால் தூபியினைக் கொண்ட புகைப்படங்கள் மற்றும் கொடிகள் ஏற்றப்பட்ட 2 மிதக்கும் தூபிகள் நேற்று இரவு 9 மணியளவில் மிதந்து வந்ததையடுத்து, அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதனையடுத்து அங்கு வந்த புலனாய்வு பிரிவினரும், காவல்துறையினரும் அதனை மீட்டிருந்ததுடன், மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.








