நாட்டில் தற்போது சிக்குன்குனியா மற்றும் டெங்கு பாதிப்புகள் கடுமையாக அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது.
நாட்டில் தற்போது பதிவாகி வரும் நோய் தொற்று தொடர்பில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சகம் சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையிலேயெ இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருவரின் வீடு மற்றும் அலுவலகத்தைச் சுற்றியுள்ள சூழலை நுளம்புகள் உருவாகாத வகையில் வைத்திருக்க வேண்டும் என அந்த அமைச்சுக்கள்ளின் செயலாளர் சுகாதாரம் மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க அறிவித்துள்ளார்.
இதற்காக அரசாங்கம் விரிவான நுளம்பு கட்டுப்பாட்டு திட்டத்தினை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு மணிநேரமாவது தங்கள் வீடுகள், அலுவலக வளாகங்களை சுத்தம் செய்யுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யக்கூடிய இடங்களைக் கொண்ட 31 ஆயிரம் 145 வளாகங்கள் அடையாளம் காணப்பட்டதாகவும், நுளம்புகள் உள்ள 6 ஆயிரம் 077 வளாகங்களும் அடையாளம் காணப்பட்டதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதலாக, 3 ஆயிரம் 916 சிவப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டதாகவும், 1470 வளாகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் மேலும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நுளம்பு கட்டுப்பாட்டு திட்டம் மே 19 முதல் 24 வரை தொடங்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆய்வு செய்யப்பட்ட மொத்த வளாகங்களின் எண்ணிக்கை 1 இலட்சம் 28 ஆயிரம் 824 என்றும், அவற்றில் 1 இலட்சம் 19 ஆயிரம் 677 வீடுகள், 257 பாடசாலைகள், 304 பிற கல்வி நிறுவனங்கள், 789 அரச நிறுவனங்கள், 5 ஆயிரம் 025 தனியார் நிறுவனங்கள், 700 கட்டுமான தளங்கள், 195 தொழிற்சாலைகள், 263 பொது இடங்கள், 514 மத இடங்கள் மற்றும் 1100 பிற இடங்கள் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இலங்கையில் 16 ஆண்டுகளில் சிக்குன்குனியா வைரஸின் பரவல் மிக மோசமான நிலையை எட்டியுள்ளதாக பேராசிரியர் நீலிகா மாலவிகே தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.








